Thursday, September 30, 2010

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் - 01

கிரகங்கள் பூமியிற்கும் நட்சத்திரங்களுக்கும் சார்பாக‌ வானத்தில் சுழல்கின்றன, இவை பூமியில், மனிதனின் வாழ்க்கையில் நடைபெற்ற, நடைபெறுகின்ற, நடைபெறப்போகின்ற சம்பவங்களுக்கான குறிகாட்டிகளாக செயற்படுகின்றன என்பது தான் ஜோதிடத்தின் அடிப்படை. இந்த அடிப்படையினைக் கொண்டு பல கோட்பாடுகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்தப்பதிவுகள் பாரத தேசத்தைச் சார்ந்து வளர்ந்த ஜோதிடக்கலையினைப் பற்றியே அதிகம் பேசப்போகிறது.

இந்திய ஜோதிடக்கலை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு நெறிப்படுத்தப்பட்ட ஒன்றாகும். இதன் படி பல நுணுக்கமான கணிதங்கள் அச்சொட்டாக வாழ்க்கையை படம் பிடித்துக்காட்டக்கூடியவாறான விதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

முதலாவது அடிப்படை: கிரகங்கள்
, வானியலில் பிரயோகிக்கப்படும் கிரகம் என்ற வார்த்தையும் ஜோதிடத்தில் பிரயோகிக்கப்படும் கிரகம் என்ற வார்த்தையும் வேறு அர்த்தம் கொண்டவை. புதன் தொடக்கம் யுரேனஸ் வரையிலான சூரியனைச் சுற்றிவருவனவே வானியலில் கிரகங்கள் எனப்படுகின்றன. ஆனல் ஜோதிடத்தில் சூரியன், சந்திரன், புதன், செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் சனி ஆகிய ஏழுமே கிரகங்கள். இவற்றுக்கு மேலதிகமாக ராகு, கேது என்பன நிழல் கிரகங்கள் கருதப்படுகின்றன. இவை உண்மையில் கணிதப் புள்ளிகள், ஆக மொத்தம் ஒன்பது கிரகங்கள் முக்கியமாக கருதப்படுகிறது.

இதுதவிர 11 உபகிரகங்களாக ஒருசில கணிதப்புள்ளிகள் காணப்படுகின்றன. லக்கினம் என்பது பூமிசுழலும் போது எந்தப்புள்ளி கிழக்கு நெட்டாங்கில் வானத்தில் எந்த ராசியினைப் பார்த்து நிற்கிறதோ அப்புள்ளி லக்கினம் எனப்படும். இது தவிர சில கணிதப்புள்ளிகள் விஷேட லக்கினங்கள் எனப்படுகிறது. 

இரண்டாவது அடிப்படை இராசி:
மேற்குறிப்பிட்ட கிரகங்கள், உபகிரகங்கள், லக்கினம், விஷேட லக்கினங்கள் என்பன நட்சத்திர மண்டலத்தில் பாகை, கலை, விகலை என குறித்த ஒரு மாறாப்புள்ளியினை கருதி கணிக்கப்படுகின்றது. இப்புள்ளியினை பூமத்திய புள்ளி என அழைக்கலாம். இப்புள்ளியிலிருந்து கிரகங்கள், உபகிரகங்கள், லக்கினம், விஷேட லக்கினங்கள் என்பனவற்றின் இருப்பைக்குறிப்பிட அகலாங்கு அல்லது ஸ்புடம் எனும் சொல் பாவிக்கப்படுகிறது. பூமியின் சார்பாக வானத்தில் காணப்படும் எந்தவொரு கிரகத்தின் இருப்பும் 0°0'0'' (0 degrees 0 minutes 0 second) தொடக்கம் ‌ 359°59'59'வரையில் காணப்படும். 0°0'0''எனபது ராசிமண்டலத்தின் தொடக்கமாகும். மேற்க்கத்திய முறையில் சாயன ராசிமுறை அதாவது நகரும் ராசிமண்டலமும், இந்திய ஜோதிடத்தில் நிராயன ராசி முறை அதாவது நகராத ராசிமண்டலமும் பயன்படுத்தப்படுகிறது. 

மேற்க்குறிப்பிட்ட வானத்தில் உள்ள ராசி மண்டலம் 360 பாகைகளால் ஆனது, அவற்றை சரிசமனாக 12 பகுதிகளாக பிரிப்பதன் மூலம் ராசிகள் பெறப்படுகின்றது.

கீழே உள்ள அட்டவணையில் 12 ராசிகளுக்குமுரிய ஆங்கில, தமிழ் பெயர்களும் அவை அடங்கும் பாகைகளும் தரப்பட்டுள்ளது. 


உதாரணமாக செவ்வாய் 221°37" பாகையில் இருப்பதாக கருதின் இந்த அட்டவணையின் மூலம் விருட்சிக‌ ராசியில் இருக்கின்றது எனக்கண்டுபிடிக்கலாம்.  

மூன்றாவது அடிப்படை பாவம்: இதனை தமிழில் கூறுவதானால் வீடு எனக்கூறலாம். ஒரு ஜாதகத்தினை எடுத்துக்கொண்டால் வீடுகள் குறித்த சார்புப் புள்ளிகளான லக்கினம், சந்திர லக்கினம், விஷேட லக்கினம் என்பவற்றினூடாக ராசிமண்டலத்துடன் வரையறுக்கப்படும். லக்கினம் முதலாவது வீடாகக் கொண்டு 1 தொடக்கம் 12 வீடுகள் ராசிமண்டலத்துடன் வரையறுக்கப்படும். உதாரணமாக துலா லக்கினம் எனின் இரண்டாவது வீடு விருச்சிகம், மூன்றாவது வீடு தனுசு என பன்னிரண்டாவது வீடு கன்னியாக ராசிச்சக்கரம் முடிவுறும். இந்த ஒவ்வொரு வீடும் வாழ்க்கையின் ஒவ்வொரு விடயத்தினைக் குறிக்கின்றது. இதுபற்றி வேறொரு பதிவில் பார்ப்போம்.

ஜோதிட தத்துவ விஞ்ஞான அடிப்படைகள் அடுத்த பதிவிலும் தொடரும் ......

No comments:

Post a Comment